ஒரு மனிதனால் எத்தனை நாட்கள் வரை தூங்காமல் சமாளிக்க முடியும்?

உலகெங்கும் கடுமையான தாக்குதல் நடந்த போர்க் களங்களில், சில சிப்பாய்கள் நான்கு நாட்கள் வரை தூங்காமல் சமாளித்த சம்பவங்களும் உண்டு. மற்றபடி, தூக்கமின்மை நோய், மரபியல் குறைகள் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மேனியா போன்ற மன நலமின்மைக்கு ஆளானவர்கள், அதைவிட சற்று அதிகமான நேரம் தூங்காமல் இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களை சராசரி மனிதர்களின் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவில், 1964ல், சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ராண்டி கார்ட்னர், தன், 17வது வயதில் ஒரு பரிசோதனைக்காக, 264 மணி நேரம் (11 நாட்கள்) தூங்காமல் இருந்திருக்கிறார். ஆனால், அந்த பரிசோதனை முடிவதற்குள், 1964ம் ஆண்டிற்கான, 'கின்னஸ் உலக சாதனைகள்' புத்தகம் அச்சேறிவிட்டதால், அவரது சாதனை, அந்த ஆண்டு பதிப்பில் வரவில்லை. 1964ம் ஆண்டு முடிவதற்குள் சிலர், ராண்டியின் சாதனையை முந்தினர்.

அதில் பிப்ரவரி, 15, 1964 அன்று, 276 மணி நேரம் (பதினொன்றரை நாட்கள்) தூங்காமல் விழித்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சோமி சோய்னியின் பெயர் கின்னசில் பதிவானது. ஆனால், உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் சாதனைகளை இனி ஊக்குவிக்கக் கூடாது என்று, 1989ல் முடிவெடுத்த கின்னஸ், சோய்னியின் சாதனையை நீக்கிவிட்டது. தவிர, 'இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் உள்ளவர்கள், கின்னஸ் சாதனையை விட அதிக நாட்கள் தூங்காமல் இருந்ததாக சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதை உறுதி செய்வது கடினம். மேலும், தூங்காமல் விழித்திருக்கும் சோதனையில் பங்கேற்பவர்கள், தங்களையும் அறியாமல், பிறராலும் கண்டுபிடிக்க முடியாமல், குட்டித் தூக்கம் போட்டுவிடுவர். இதை, மூளையின் அலைவரிசையை கண்காணிக்கும், ஈ.ஈ.ஜி., சாதனத்துடன் தான் கண்டறிய முடியும். அது போன்ற கண்காணிப்புடன், உலகில் எந்த போட்டியும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.

ராண்டியின் பெயர் கின்னசில் இடம்பெறாவிட்டாலும், தூக்கம், விழித்தல் பற்றி பேசுபவர்கள் இன்றும் அவரது பெயரைத்தான் மேற்கோள்காட்டி வருகின்றனர். காரணம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் வில்லியம் டெமென்டின் மேற்பார்வையில், அந்த பரிசோதனை அறிவியல்பூர்வமாக கண்காணிக்கப்பட்டது தான்.



                                                                (Sleep Well And Live Well)

Comments